சொத்து ஆவணங்கள் மாயம்; தினேஷ் கார்த்திக் புகார்!
பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் சொத்து ஆவணங்கள் மாயமாகியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கிய வீரராக இருப்பவர் தினேஷ் கார்த்திக். இவர் கொல்கத்தா கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். தினேஷ் கார்த்திக் தற்போது போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான மற்றொரு வீடு அக்கறையில் உள்ளது. அந்த வீட்டின் சொத்து ஆவணங்கள் போயஸ் கார்டனில் உள்ள தனது அடுக்கு மாடி குடியிருப்பில் வைத்திருந்ததாகவும் அதனை நகல் எடுப்பதற்க்காக தேடிய போது அது காணவில்லை என அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
தேனாம்பேட்டை போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நடிகர் ராம்கி தனது வீட்டின் சொத்து ஆவணங்கள் மாயாமாகியதாக இதே தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: "வலி வந்து அழுத்துது" மாரிமுத்துவின் வீடியோ வைரல்!