கோவை கார் குண்டு வெடிப்பு... முதல் குற்ற பத்திரிகை தாக்கல்...! 

கோவை கார் குண்டு வெடிப்பு... முதல் குற்ற பத்திரிகை தாக்கல்...! 

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பான முதல் குற்ற பத்திரிகையை நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது.

கோவை உக்கடத்தில் கோட்டையீஸ்வரன் கோவில் வாசலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் குண்டுவெடிப்பில்  ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, வெடிபொருட்கள், சிலிண்டர் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது தல்கா, முகமது அசாரூதின், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், பிரோஸ் இஸ்மாயில், அப்சர் கான் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் தீவிர தன்மை கருத்தில் கொண்டு வழக்கானது தேசிய புலனாய்வு முகமை (NIA)  விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது அசாருதீன் என்பவரிடமிருந்து ஒரு பென்டிரைவ் மீட்கப்பட்டதாகவும்  அந்த பெண் டிரைவில் ஜமேஷா முபின் பேசிய வீடியோவில், தான் தௌலத்-இ-இஸ்லாமியா என்ற அமைப்பின் உறுப்பினர் எனவும், இஸ்லாமை எதிர்ப்பவர்கள் மீது தீவிரமான தற்கொலை தாக்குதல் நடத்தவும், அதன் மூலமாக தான் உயிரிழப்பது பற்றியும் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 250 மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுபவர் ஷாரன் ஹாசிம்.  இவரது பேச்சுக்களால் ஜமோஷா மூபின் ஈர்க்கப்பட்டதாகவும் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இந்தியாவில் ஒரு தாக்குதலை நடத்த முபின் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளதாக குற்றப் பத்திரிக்கையில் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் கார் வெடிகுண்டு நிகழ்த்துவதற்கான பொருட்களை அப்சர் கான்  ஜமோஷா முபினுக்கு வாங்கி கொடுத்துள்ளதாகவும், குண்டு வெடித்த மாருதி காரை முகமது தல்லா ஏற்பாடு செய்ததாகவும், ஃபெரோஸ் மற்றும்  நிவாஸ் ஆகியோர் இருவரும் வெடி பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை கொடுத்து உதவி செய்ததாகவும் குற்ற பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com