இருசக்கர வாகனத்தின் பெட்டிக்குள் இருந்து பணம் திருட்டு; பட்டப்பகலில் நடந்த பதற வைக்கும் சம்பவம்:
செங்கத்தில் பட்டப்பகலில் நகரின் மையப்பகுதியில் இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி செட்டிதாங்கள் கிராமத்தில் வசிப்பவர் முருகன், விவசாய கூலி வேலை செய்துவருகிறார். இவர் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி தனது குடும்ப செலவிற்காக தனது மனைவியின் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை செங்கம் ராஜவீதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் அடகு வைத்து ரூபாய் 76 ஆயிரத்துக்கு வைத்திருந்தார்.
இந்நிலையில் அடகு வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைக்கு 80 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் செலுத்தி வங்கியிலிருந்து மீட்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் வைத்து பத்திரமாக பூட்டி வைத்துவிட்டு தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
செல்லும் வழியில் புதிய பேருந்து நிலையம் அருகே பெங்களூர் சாலையிலுள்ள லட்சுமி பேக்கரி அருகே நிறுத்திவிட்டு பேக்கரியில் உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு, இரு சக்கர வாகனத்திலிருந்த பெட்டியில் வைக்க பெட்டியை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த நகைகள் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படியில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேக்கரியில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத நபர், இருசக்க வாகனம் அருகே சென்று நகையை எடுத்துக்கொண்டு மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்ட பெட்டியின் பூட்டு உடைக்காமல் நுதன முறையில் பெட்டியை திறந்து நகைகை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நகையை பறிகொடுத்த முருகன் மற்றும் அவரது மனைவி இருவரும், காவல்துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.