ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர்களை ஆபாசமாகப் பேசி தாக்குதல் நடத்திய இளைஞர் மீது சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயிலில் வடமாநில இளைஞர்களை ஆபாசமாகப் பேசி தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவியது. அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் ஏராளமான வடமாநில இளைஞர்களை தமிழ் பேசக் கூடிய நபர் ஒருவர் கடுமையாக வசைபாடுவது இடம்பெற்றிருந்தது.
இங்குள்ள வேலைகளை நாங்கள் செய்துகொள்வோம் எனவும், உங்களுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை எனக்கேட்டும் அவர்களை சரமாரியாக அந்நபர் தாக்கினார். ஒரு கட்டத்தில் ஆபாசமாகப் பேசத் தொடங்கிய அவர், அருகிலிருந்தோர் சொல்லியும் கேட்காமல் அங்கிருந்து நகர முற்பட்ட இளைஞர்களை தேடிச்சென்று தாக்கினார்.
தொடர்ந்து இக்காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இதுதொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.