காதலனை திருமணம் செய்ய நாடகமாடிய பெண்...

தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், காதலன் தன்னை கூட்டு பாலியல் செய்ததாக நாடகமாடிய அவலம் தெரியவந்துள்ளது.
காதலனை திருமணம் செய்ய நாடகமாடிய பெண்...

காஞ்சிபுரம் | சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் கிருஷ்ணவேணி என்பவரது வீட்டின் கதவை பெண் ஒருவர் தட்டியுள்ளார்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து போராடி தப்பி வந்ததாகவும் காவல் நிலையத்தில் தன்னை ஒப்படைக்கும் படி கூறி உள்ளார்.

இதனையடுத்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கை களத்தூர் பகுதியைச் சேர்ந்த 21-வயது மதிக்கத்தக்க பெண் என அடையாளம் காணப்பட்ட அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கும் உத்திரமேரூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டதாக தெரியவந்தது.

காதலருடன் இணைந்து வாழ, அவரை திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்.

அதேபோல நேற்று இரவும், செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த பெண்ணை சலீம் சாலவாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் அப்பெண்ணை தாக்கிய சலீம் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். தொடர்ந்து அப்பெண் அருகே இருந்த வீட்டிற்கு சென்று சலீமை காவல்துறையிடம் சிக்க வைக்க கூட்டு பாலியல் பலாத்காரம் நாடகமாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக காவல்துறையினரிடம் தன்னை காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக பெண் கூறியதால் செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட பெண் சலீமுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணம் செய்ய மறுத்த காதலனை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடி போலீசில் சிக்க வைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com