புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்ற அதிரடி உத்தரவு!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்:
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.
இந்த குடிநீர் தண்ணீர் பருகிய அப்பகுதி கிராமவாசிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை அறிக்கைப்படி குடிநீர் தொட்டிய சோதனை செய்தபோது குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீவிர விசாரணை :
இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர். இதனிடையே ஏ.டி.எஸ் பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. ஆனால் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யபடவில்லை.
அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவையும் அளித்து இருந்தனர்.
சிபிசிஐடிக்கு மாற்றம் :
இதனிடையே சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.