ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் நின்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
வழக்கமாக அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனி மற்றும் ஞாயிறு மட்டுமல்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவது தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சி...