மயிலாடுதுறை | தரங்கம்பாடி அருகே உள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதான கார்த்திக். இவர் செம்பனார் கோவில் திலகர் தெருவில் வசிக்கும் சங்கர் என்பவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் ஐஸ்கிரீம் கம்பெனி நடத்தி வருகிறார்.
இந்த கம்பனி வைக்க ரூ.2 லட்சம் முன்பணம் கொடுத்து எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்கி, மாத வாடகையாக ரூ.2,500 என்பதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் செலவில் 2021 பிப்ரவரி மாதம் ஐஸ்கிரீம் தொழிற்சாலையை துவக்கி நடத்தி வந்துள்ளார்.
கொரோனா காலத்தில் கம்பெனியை இயக்கமுடியாததால் வாடகை கொடுக்க இயலவில்லை. இதையடுத்து, அந்த இடத்தை காலிசெய்ய சங்கர் வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் 2021 அக்டோபர் மாதம் ஒரு ஆர்டர் சம்பந்தமாக சென்று பார்த்தப்போது அங்கே அவரது எந்திரங்கள் இல்லை, சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டிருந்தது, பொருட்கள் அனைத்தையும் காணவில்லை.
இதுகுறித்து கேட்டதற்கு சரியான பதில் இல்லை என்பதால் செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தார். அவற்றை சரி செய்து தருகிறேன் என்று எழுதிகொடுத்துவிட்டு சென்ற சங்கர் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து, கடந்த ஜனவரி மாதம் சங்கரிடம் கேட்டதற்கு ஒன்றையும் செய்து கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
இதுகுறித்து செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் வழக்கறிஞர் சங்கமித்திரன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க எஸ் பி உத்தரவிட்டார்.