சுரங்கப்பாதை அமைக்க கோரிய மக்கள்...! சாலை மறியல் போராட்டம்...!

சுரங்கப்பாதை அமைக்க கோரிய மக்கள்...! சாலை மறியல் போராட்டம்...!

சிதம்பரம் அருகே அம்மன்கோவில் கிராம மக்கள் விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் - நாகை இடையே தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள அம்மன் கோவில் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் விபத்துக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விழுப்புரம் - நாகை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டுமென இந்த பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இதுவரையில் விரிவாக்க பணிகள் மட்டுமே விரைவாக நடைபெற்று வருவதாகவும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி எந்த ஒரு அளவிலும் பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி, தங்களுக்கு உடனடியாக சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அம்மன்கோவில் கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் சுமார் 10 கிலோமீட்டர் அளவில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாமலை நகர் போலீசார், நில அளவை தாசில்தார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியலை கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தேசிய நெடுஞ்சாலையில் சீரான போக்குவரத்து ஏற்பட்டது.

இதையும் படிக்க : சென்னை தலைமை காவலர் செய்த சிறப்பான செயல்...! இத்தனை பதக்கங்களா...?