அடுத்தடுத்து நடந்த திருட்டு... சி.சி.டி.வி காட்சியில் அம்பலம்...

அடுத்தடுத்து நடந்த திருட்டு... சி.சி.டி.வி காட்சியில் அம்பலம்...

சென்னையில் செல்போன் சர்வீஸ் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 45 பழைய செல்போன்கள் உட்பட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிராஜ்(26). இவர் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மணிராஜ் வேலை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை கடைக்கு வந்து பாரத்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மணிராஜ் கடையினுள் சென்று பாரத்தபோது  சர்வீஸ்க்கு வந்திருந்த 25 ஸ்மார்ட் போன்கள் மற்றும் 20 பேசிக் மாடல் செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது. 

இது குறித்து மணிராஜ் அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத இருவர் முதலில் செல்போன் சர்வீஸ் கடைக்கு அருகில் உள்ள பால் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது எதுவும் சிக்காததால், அடுத்தப்படியாக செல்போன் சர்வீஸ் கடை மற்றும் மளிகை கடை என தொடர்ச்சியாக மூன்று கடைகள் உடைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய இருவரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.