
ஊட்டி | நீலகிரி மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக உதகை அரசு தாவரவியல் பூங்கா திகழ்கிறது. இதனை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவினை கண்டு ரசிக்க வருகை புரிவது வழக்கம்.
அதேபோல் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்திருந்தனர். அப்போது பூங்காவில் தேன்கூடு கலைந்ததில் பூங்காவை கண்டு ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் கொத்தியது.
இதில் சில சுற்றுலா பயணிகள் தேனீக்கள் இடமிருந்து தப்பிக்க பூங்காவில் இருந்த சிலர் பதற்றம் அடைந்து பூங்காவில் அங்கும் இங்குமாக ஓடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த பூங்கா ஊழியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர், தேனீக்கள் கொத்தியதில் காயமடைந்த 15-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.