” ஆம் நான் கட்சி சார்பாக தான் செயல்படுகிறேன்...” - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

” ஆம் நான் கட்சி சார்பாக தான் செயல்படுகிறேன்...” - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 9 - வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 432 பட்டதாரிகளுக்கு பட்டங்களையும், அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் முதல் இடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும், தங்க நாணயங்களையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ஸ்டார்ட் அப்களில் இந்தியா, உலகத்தில் 3வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். 75 வது சுதந்திர தினத்தில் 75000 ஸ்டார்ட் அப்கள் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக 555  மாவட்டங்களில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஸ்டார்ட் அப்களாவது உள்ளது. இது இந்தியாவின் பிரம்மாண்ட வளர்ச்சி எனவும்  பொறியியல் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் அரசு ஏற்படுத்தி தருவதாகவும், மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். 

தமிழ்நாட்டில் கருத்து சொல்வது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழிசை,  தமிழ்நாட்டில் தமக்கு எல்லையே கிடையாது எனவும், தமிழகத்திற்கு வரும் போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாகவும், தமது பணிக்கு எல்லை கிடையாது என்றும் தமிழ்நாட்டில் கருத்து சொல்ல முழு உரிமை உள்ளது என்றும் தமக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6  பேர் விடுதலை குறித்த கேள்விக்கு. நாட்டில் உச்சபட்ட அதிகாரம் பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும், தமிழ்நாட்டில் சிலர் தங்களுக்கு வேண்டிய தீர்ப்பு வந்தால் அதை ஏற்றுகொள்வதும்;  நீட், 10% இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை உச்சநீதிமன்றம் சொன்னால் ஏற்று கொள்ளாமல் விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்தார். தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரியில் கட்சி சார்பாக செயல்படுவதாக வரும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு கட்சி சார்பு தான், மக்களோடு இருக்கின்ற மக்கள் கட்சி தலைவர் நான் என தெரிவித்தார். 

முன்னதாக பட்டமளிப்பு விழா மேடையில் பேசிய தமிழிசை பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது வீட்டில் மிக்சியை சரி செய்து தரவில்லை என்றால் உங்களது தாய் உங்களை எல்லாம் என்ஜினீயர் என ஒப்புக் கொள்ள மாட்டார் என நகைச்சுவையாக தெரிவித்தார். மாணவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டால் எப்படிப்பட்ட இலக்கையும் எட்டிவிடலாம் என்றார். செல்போன் போன்ற சாதனங்கள் தங்களை மூழ்கடிக்க விடாதபடி மாணவர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் தொழில்நுட்பம் நம்மை ஆக்கிரமித்து உள்ளது எனவும் தெரிவித்தார். புதிய கல்வி கொள்கையை முழுவதுமாக ஆராய்ந்து என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். கடல் என்றால் அதில் எத்தனை தடை வந்தாலும் நீந்த வேண்டும் என்றும், தெலங்கானாவில் இருந்து திமிங்கலம் வந்தாலும், புதுவையில் இருந்து திமிங்கலம் வந்தாலும், தமிழகத்தில் இருந்து திமிங்கலம் வந்தாலும் நான் நீந்தி வருகிறேன் என அரசியல் பார்வையில் அறிவுரை கூறினார். தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை ஒலி நாடாவில் இசைக்காமல் பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்து பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலி நாடாவில் இசைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ரூ. 60000 கோடியை எட்டப்போகும் இந்திய அமெரிக்க பொருளாதாரம்...சாத்தியமா?!