முடி சிகிச்சை செய்யும் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முடி சிகிச்சை செய்யும் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தனியார் நிறுவன ஊழியர் முடி முளைப்பதற்கு மேற்க்கொண்ட சிகிச்சை தோல்வியடைந்ததால் பாதிக்கப்பட்ட நபருக்கு செலவுடன், இழப்பீட்டு தொகை வழங்க கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு  தலையின் முன்பகுதியில் ஏற்பட்ட வழுக்கை காரணமாக 2014 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பிரபல தனியார் முடி சிகிச்சை செய்யும் நிறுவனத்தில் 3  லட்சம் ரூபாய் பணம் செலுத்தி முடி முளைக்க சிகிச்சை எடுத்துள்ளார்.

ஆனால், நிறுவனம் தெரிவித்த கால அவகாசத்திற்குள் முடி முளைக்காததால் நிறுவனத்தை தொடர்புக்கொண்டு இழப்பீடு கேட்டதாக தெரிகிறது. அந்த நிறுவனம் அலைகழித்ததால்  அதிருப்தியடைந்த ஸ்டாலின் கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை 3 பேர் கொண்ட நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி வந்த நிலையில்  இன்று தீர்ப்பளித்தது

பாதிக்கப்பட்ட ஸ்டாலின்  செலவிட்ட 3 லட்சம் ரூபாய் பணத்தை திரும்பத் தர வேண்டும் என்பதுடன் நிறுவனத்தின் அலைக்கழிப்பால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ஒன்றரை லட்ச ரூபாயும், வழக்கு தொடர்ந்த செலவிற்காக 10 ஆயிரம் ரூபாய் அந்த நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.