அவன் என்னை நம்ப வைத்து நாடகமாடினான்! - முபின் மாமனார் குற்றச்சாட்டு:

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தங்களிடம் நல்லவன் போல் நாடகமாடிய ஏமாற்றி சதி வேலையில் ஜமேஷா முபின் ஈடுபட்டுள்ளதாக அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.
அவன் என்னை நம்ப வைத்து நாடகமாடினான்! - முபின் மாமனார் குற்றச்சாட்டு:

கோவை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில் வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே உயிரிழந்த ஜமேஷா முபினின் மனைவியின் தந்தை எமது மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனாதை பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த முபின் உறவினரின் மூலம் தன்னை அணுகி தனது மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்தார்.”

அரசு ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி சாப்பிட்டு ஆடம்பரமின்றி முபின் வாழ்ந்து வந்ததாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியது தொடர்பாக கேட்டதற்கு தன்னை யாரோ வேண்டுமென்றே மாட்டி விட்டுள்ளதாக கூறியதாக தெரிவித்தார். 

கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் வீட்டிற்கு சென்ற போது அதிகளவில் பெரிய பெட்டிகள் இருந்ததாகவும்,இதுகுறித்து சந்தேகம் ஏற்பட்டு முபினிடம் கேட்டதற்கு ஆங்கிலம் மற்றும் இஸ்லாம் புத்தகம் என கூறியுள்ளார். 

அண்மைகாலமாக துணிகள், தேன் மற்றும் நாட்டு மருந்துகள் போன்றவை விற்பனை செய்து, தொழில் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவ்வப்போது கேரளாவிற்கு இரண்டு முறை வைத்தியத்திற்காக செல்வதாக கூறி சென்று வரும் போது மருந்துடன் வருவதால் தங்களுக்கு எவ்வித சந்தேகமும் எழவில்லை என்றார்.

இதனிடையே கடந்த 23 ஆம் தேதி மாலை முபின் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை வெளியே அழைத்து சென்று விட்டு, தங்களது வீட்டில் விட்டு சென்ற பிறகு செல்போனில் மட்டும் பேசியதாகவும் தெரிவித்தார்.

நண்பர்கள் வட்டம் அதிகம் இல்லாமல் சமீபகாலமாக அசாருதீன் என்பவருடன் அதிகளவு நெருக்கத்தில் இருந்து வந்ததாகவும்,இப்படியொரு சதி வேலையில் ஜமேஷா முபின் ஈடுபட்டிருப்பார் என  நம்ப முடியவில்லை என தெரிவித்தார். 

ஜமேஷா முபினின் இந்த செயலால் மாற்றுத்திறனாளியான தங்களது பெண்ணும், அவரது இரண்டு பெண் குழந்தையும் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்விற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வருவதாக வேதனையுடன் அனீஃபா தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com