காட்டெருமை முட்டித் தள்ளியதில் உயிரிழந்த விவசாயி...

மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை காட்டெருமை முட்டித் தள்ளியதில் விவசாயி உயிரிழந்துள்ளார்.
காட்டெருமை முட்டித் தள்ளியதில் உயிரிழந்த விவசாயி...

திருச்சி | துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் மலையாண்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 46). விவசாயியான இவர் இன்றுகாலை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்கு சாட்சி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தனது ஊரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தெத்தூர் - மருதம்பட்டி சாலையில் தெத்தூர் நர்சரி கார்டன் அருகே சென்று கொண்டிருந்த போது 7 காட்டெருமைகள் சாலையில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த சிவஞானம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்த முயற்சிக்கவே கூட்டத்தில் இருந்த ஒரு காட்டெருமை அவரின் மார்பு பகுதியில் முட்டித் தள்ளியது.

இதில் மார்பு பகுதி சிதைந்து சிவஞானம் ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதை பின்னால் வந்தவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சிவஞானத்தை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது ஏற்கனவே அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டெருமை முட்டி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com