தந்தை மரணமடைந்த வேதனையிலும் பிளஸ் 2 தேர்வு எழுதி 479 மதிப்பெண் பெற்ற கடலூர் மாணவி தனது வெற்றியை பார்க்க தந்தை இல்லை வேதனை தெரிவித்துள்ளார்.
கடலூர் அடுத்த பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாணவி கிரிஜா. கடலூர் மாநகராட்சி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவர், வேதியியல் தேர்வு நடைபெற்ற அன்று மாணவியின் தந்தை ஞானவேல் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தையின் இழப்பை தாங்க முடியாமலும், தேர்வினை எழுதியாக வேண்டும் என்ற கட்டாயத்திலும், தனது சோகத்தை மறைத்து தேர்வினை எழுதி முடித்தார். பின்பு தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதனையடுத்து இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மாணவி கிரிஜா 600 மதிப்பெண்ணுக்கு 479 பெற்றுள்ளார். தந்தை இறந்த தேதி அன்று மாணவி எழுதிய வேதியியல் தேர்வில் 81 மதிப்பெண் பெற்றுள்ளார். இதனையடுத்து பேட்டியளித்த மாணவி, தந்தையின் ஆசையை நிறைவேற்றியும் தனது வெற்றியை காண அவர் இல்லை என வேதனை தெரிவித்தார். தொடர்ந்து தனது மேற்படிப்பை தொடர அரசு தனக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க:மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?