ரோகிணி தியேட்டர் விவகாரம்...கண்டனம் தெரிவித்த கமல், வெற்றி மாறன்...!

ரோகிணி தியேட்டர் விவகாரம்...கண்டனம் தெரிவித்த கமல், வெற்றி மாறன்...!

சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவறவர்கள் அனுமதிக்கப்படாத விவகாரத்திற்கு நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் வெற்றிமாறனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ”பத்து தல” படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேற்றைய தினம் திரையரங்குகளில் பிரமாண்டமாக திரைப்படம் வெளியானது.  படத்தை பார்ப்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், ‘பத்து தல’ படத்தை பார்ப்பதற்காக சென்னை ரோகிணி திரையரங்கிற்கு குழந்தையுடன் சென்ற நரிகுறவ பெண் ஒருவர், திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அந்த பெண் கையில் டிக்கெட் வைத்திருப்பதாக கூறிய பின்னரும் அவர்கள் அனுமதிக்கப்படாதது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 

பின்னர் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். கடும் எதிர்ப்பையடுத்து, அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கலாஷேத்ரா விவகாரம் - சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!யாராக இருந்தாலும் நடவடிக்கை கட்டாயம்!!

இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்த வகையில் தற்போது நடிகர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, 100 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமையை உடைத்தெறிந்த திரையரங்கம், இன்று உழைக்கும் எளிய மக்களிடம் தீண்டாமையை கடைபிடிப்பது ஆபத்தான போக்கு என இயக்குனர் வெற்றிமாறனும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.