
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.