
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த வியாழக் கிழமை தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில் மாநாடு திரைப்படத்தில் வன்முறையை துண்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேசி இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
மாநாடு திரைப்படத்தில் மத அடையாளங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்முறையை துண்டும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளது என்றும் இந்து- முஸ்லிம் ஒற்றுமையை சீர்குழைக்கும் இந்த படம் அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் மாநாடு திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும் தடை செய்யாவிட்டால் பாஜக போராட்டம் நடத்தும் என கூறியுள்ளார்.