‘ராக்கெட்ரி’ படம் பாசா ஃபெயிலா? மாதவனின் முதல் படம் எப்படி இருந்தது?
நடிகர் மாதவன் முதன் முறையாக இயக்கத்தில் கால் தடம் பதித்த வித்தியாசமான படம் தான் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட். நேற்று வெளியான இந்த உண்மை சம்பவம் தழுவிய படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மும்பையின் ஒரு சீரியலில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய மாதவன், பல படங்களில் நடித்திருக்கிறார். அலைபாயுதே படத்தில் என்றென்றும் புன்னகை பாடலுக்கு சாக்லெட் பாயாக, கோலிவுட்டிற்கு அறிமுகமான மாதவன், இன்று வரை தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். தான் ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல சினிமாக்காரன் என நிரூபிக்கும் வகையில், ‘Rocketry: The Nambi Effect’ என்ற படத்தை, எழுதி இயக்கி தயாரித்தும் இருக்கிறார்.
விண்வெளி ஆராய்ச்சியாளர் டாக்டர் நம்பி நாராயணன் அவர்களின் கதையை சுய சரிதை படமாக உருவாக்கிய மாதவன், நம்பியாகவே நடித்திருக்கிறார். மறைந்த டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமிற்கும் மேலாக் போற்றப்பட வேண்டிய நம்பி நாராயணன், தேச துரோகி என பட்டம் சூட்டப்பட்டு மோசமான முறையில் நடத்தப்பட்டார் என்பதனை மிக அருமையாக எடுத்துக் காட்டி அவருக்கு நடந்த அநீதிகளை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் மாதவன். தனது முதல் படமே, இப்படிப்பட்ட மிகவும் கடினமான கதையை எடுத்து அதனை வெற்றி அடைய வைத்திருக்கிறார் மாதவன்.
இது வரை ஒரு போட்டோ கூட எடுக்கத் தெரியாத நான், ராக்கெட்ரி என்ற ஒரு படத்தையே எப்படி எடுத்தேன் எனத் தெரியவில்லை என ஒரு பேட்டியில் கிண்டலாக பேசிய மாதவன், தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படத்திற்கு குவியும் பாராட்டுகளால் நெகிழ்ச்சியில் உள்ளார்.
இந்த படத்தை கொரோனா காலத்திற்கு முன் எடுத்த நிலையில், இரண்டு வருடமாக உருவான அனைத்து வகையான கடும் எதிர்ப்புகளை அடுத்து ‘Rocketry: The Nambi Effect’ படத்தை வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறார். இதனை, சமீபத்தில் நடந்த கேன்ஸ் சரவதேச திரைப்பட விழாவில் திரையிட்டார். படம் முடிந்த பிறகு, சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த படத்தைப் பார்த்த பார்வையாளர்கள், பத்து நிமிடங்கள் வரை எழுந்து நின்று கரகோஷங்களைக் கொடுத்துள்ளனர்.
தன்னிடன் இருந்தகடைசி பணம் வரை பயன்படுத்தியும், தனது மனைவியின் பணத்தைப் பயன்படுத்தியும் உருவாக்கிய இந்த படம், இந்திய அரசை எதிர்ப்பதாக இருக்கிறது என ஒரு சில எதிர்ப்புகள் உருவானது அனைவரும் அறிந்ததே. பல கஷ்டங்களைத் தாண்டி, தனி ஆளாக இந்த படத்தை உருவாக்கிய மாதவனுக்கு இந்த 10 நிமிட கரகோஷமெல்லாம் சிறிய பாராட்டுதான் என இணைய வாசிகள் கமெண்ட் செய்து வருவதோடு, மாதவனுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த நடிகர் சூரியா மற்றும் நடிகர் ஷாருக்கான், நட்பு ரீதியாக மட்டுமே நடித்து ஒரு ரூபாய் கூட வாங்கமல் இருந்தது குறித்து பெருமை பேசிய மாதவன், இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். நேற்று ஏவப்பட்ட ISROவின் PSLV C 53 வெற்றிகரமாக விண்ணைத் தொட்ட நிலையில், அந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட பெரும்பான்மையான எஞ்சின்கள் நம்பி அவர்களால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.