ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஜூலை 13ம் தேதி இறுதி விசாரணை!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஜூலை 13ம் தேதி இறுதி விசாரணை!

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மீண்டும் மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகளை ஜூலை 13ம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களில் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
 
இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லா இளைஞர்கள் தின கூலிகள் ஆட்டோ டிரைவர்கள்  ஒரு போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது என்றும் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது, ஆன் லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோத்தஹி, ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள், ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்ததாகவும், அதனை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.  

தற்போது, ஆன் லைன் விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டு எனவும், அதற்கு பலர் அடிமையாகி, நிதி இழப்புகளை சந்தித்து, தற்கொலைகள் செய்து கொள்வதாக கூறி தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு  ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஏற்கனவே இரண்டு மணி நேரம் தடை கோரி வாதிடப்பட்டதாகவும், அதை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், இறுதி விசாரணைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரினார்.

இதையடுத்து, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், வழக்குகளை இறுதி விசாரணைக்காக ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க:வேங்கைவயல் விவகாரம்; "அரசு 4 வாரங்களில் அறிக்க தாக்கல் செய்ய வேண்டும்" -உயர் நீதிமன்றம்!