பொன்னீலன், சீனு ராமசாமிக்கு 'படைப்பு சங்கமம்' விருது!

எழுத்தாளர் பொன்னீலன் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோருக்கு "படைப்பு சங்கமம் 2023" விருது வழங்கப்பட்டுள்ளது. 

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையத்தின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கென்று கடின உழைப்போடு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது படைப்பு குழுமம். கடந்த எட்டு வருடங்களாக கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், சிறுகதை போன்ற இலக்கிய வகைமைகளை அரங்கேற்றுவதற்கு தகுதியான மேடையை முகநூல் குழுவின் மூலம் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நாவல் முதற் கொண்டு அனைத்து வகை இலக்கிய நூல்களையும் பதிப்பு செய்து "படைப்பு சங்கமம் " என்ற பெயரில் பிரம்மாண்டமான விழா எடுத்து மூத்த எழுத்தாளர், வளரும் எழுத்தாளர் என்ற பாரபட்சம் இன்றி அங்கீகரித்து வருகிறது படைப்பு குழுமம்.

நூல் வெளியிடுவதோடு நிறுத்தி விடாமல் படைப்பு குழுமத்தில் பதியப்படும் சிறந்த கவிதைகளில் இருந்து விருதுக்குரியவர்களை தேர்வு செய்து விருதும் , தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் நோக்கில் சிறுகதை போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி அதில் பரிசு பெறுபவர்களுக்கு பரிசும் தந்து கௌரவிக்கப்படுகிறது.

இந்த வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான படைப்பு சங்கமம்  மிகச் சிறப்பான முறையில் சென்னை தி நகரில் உள்ள சர் பி டி தியாகராஜர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இளம் கலைஞர்களின் பறையிசையில் அரங்கம் அதிர தொடங்கிய  படைப்பு சங்கமத்தில் எழுத்தாளர் பொன்னீலன், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், சிறைத்துறை DIG திரு.முருகேசன், எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மூத்த இலக்கியவாதிகளும் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரளாக வந்திருந்த இளம் இலக்கியவாதிகள் சங்கமிக்க விழா இனிதே தொடங்கியது. 

இந்த ஆண்டு படைப்பு சங்கமத்தில் சுமார் 40 இலக்கிய நூல்கள் வெளியிடப்பட்டன. ஒரு தனியார் தொலைக்காட்சி விருது விழாவிற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் மிகச் சிறப்பான காணொளிகள் மூலம் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.

இந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த எழுத்தாளர் திரு பொன்னீலன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தழுதழுத்த குரலில் அவர் தன்னுடைய தாயைப்பற்றியும், தன் இலக்கியப் பணியை தொடர்ந்து செய்யும் தனது மகள்கள் மற்றும் பேத்தியை பற்றியும் பேசியது அரங்கத்தை நெகிழ வைத்தது‌. இந்த வருடத்திற்கான படைப்பு சுடர் விருது எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் மலையாள எழுத்தாளர் ஷாஃபி சிறூமாவிலாயி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதேபோல கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களுக்கும், கவிஞர் தேன்மொழி தாஸ் அவர்களுக்கும் இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் வெளியான கவிதை கட்டுரை சிறுகதை உள்ளிட்ட அனைத்து இலக்கிய வகைகளுக்கான படைப்பு இலக்கிய விருதுகள் இந்த வருடமும் வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு படைப்பு பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படும் நூல்களை படைப்பு பரிசீலனை செய்யாது என்பது படைப்பின் நேர்மைக்கான ஒரு சான்று. இந்த வருடத்திற்கான விருதுகளை அந்தந்த பிரிவில் சுமார் பத்து நூல்களுக்கு வழங்கப்பட்டது.

இலக்கியத்தோடு மட்டும் அல்லாமல் சமூகத்தில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து படைப்பு சிறப்பு விருதுகள் வழங்குவது படைப்பின் வாடிக்கை.  இந்த வருடத்திற்கான இயல் இசை நாடக விருதை தன்னை எங்கும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக சேவை செய்து வரும்  நாடகவியாளர் மு ராமசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

சினிமாவை இலக்கியம் போலவே படைக்கும் இலக்கியவாதி, உள்ளூர் கதைகளை உலகப் படங்களாக திரையாக்கும் விந்தை பெற்ற, வாத்தியார் பாலு மகேந்திராவின் முதன்மை சீடர் சீனு ராமசாமிக்கு இந்த வருடத்திற்கான கலை இலக்கிய விருது வழங்கப்பட்டது ‌.  தனக்கு பரிசாக வந்த 25 லட்ச ரூபாயை தன்னுடைய கிராமத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவறை கட்டித் தந்த அரசு பள்ளி மாணவி ஜெயலட்சுமிக்கு மாண்புமிகு மகளிர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இதே போல சிறந்த சமூக அக்கறையாளர், சிறந்த பதிப்பகம், சிறந்த கலை உள்ளிட்ட 10 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இத்தனை பெரிய விழா எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அதே நேரத்தில் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் ஒரு சிறிய கூட்டத்தால் சிறப்பாக நடந்தேறியது. இந்தக் கூட்டத்தை கட்டிக் காக்கும் தலைவனாக ஜின்னா அஸ்மி என்ற ஒரு இளைஞரும் அவருக்கு பக்கபலமாக சலீம் கான் மற்றும் ராஜா ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.  இவர்கள் அனைவரது கூட்டு முயற்சியில் படைப்பு இன்னும் உயரங்களை தொடும் 
என்பது நிச்சயம். 

ஒரு இனத்தின் வரலாற்றை கட்டி காப்பது இலக்கியம் என்றால் இதைப் போன்ற தன்னார்வல இலக்கிய அமைப்புகளை கட்டி காப்பது தட்டிக் கொடுப்பது அனைவரும் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் வேலை. அதை அனைத்து ஊடகங்களும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு படைப்பு சங்கம விழா பற்றிய தொகுப்பு நிறைவு பெறுகிறது. 

இதையும் படிக்க: ஏழாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரதம்!