கோடியக்கரையில் சீசனுக்கு முன்பே குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!

கோடியக்கரையில் சீசனுக்கு முன்பே குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு காலநிலை மாற்றத்தால் முன்கூட்டியே வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்து வருகின்றன.  
   
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கபடும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு
ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான்,  ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து பறவைகள் வந்து போவது வழக்கம். அங்கு நிலவும் குளிரான சூழலை தவிர்க்க இங்கு சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தினாலும், ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரை போக்கவும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் இறுதியில் வரவேண்டிய பறவைகள் முன்கூட்டியே வந்து குவிந்துள்ளது.

தற்போது சரணாலயத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் வகை பறவைகள் உள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரைதேடுவதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு,  உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும், படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

இதையும் படிக்க:"40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி" சீமான் தகவல்!