உலக நாயகனுக்கு இன்று பிறந்தநாள்...

தமிழகத்தின் ஒப்பற்ற திரைக் கலைஞன் என பெயர் எடுத்த உலக நாயகன் கமல் ஹாசனின் பிறந்த நாளான இன்று, அவரின் திரைப்பயணம் குறித்த ஒரு சிறிய தொகுப்பை தற்போது காண்போம் ...
உலக நாயகனுக்கு இன்று பிறந்தநாள்...
Published on
Updated on
2 min read

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், வசன கர்தா, பின்னணி பாடகர், தொழில்நுட்ப கலைஞர், நடன அமைப்பாளர் என திரைத்துறையில் கமல்ஹாசன் தடம் பதிக்காத துறையே இருக்க முடியாது எனலாம். சினிமாவின் மீது கொண்ட தீராத காதலால், குழந்தைப் பருவம் முதல் இன்று வரையில் சினிமாவை மட்டுமே உயிர் மூச்சாக சுவாசித்து வரும் உன்னத கலைஞர் கமல்ஹாசன். 

திரைத்துறையில் வழங்கப்படும் விருதுகளுக்கெல்லாம் புகழ் சேர்த்தவர் நடிகர் கமல்ஹாசன். சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர், பிலிம்ஃபேர் விருதுகள், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ  என ஏராளமான விருதுகளுக்கு சொந்தக் காரர் இந்த வித்தகர். 1960-ல் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு வருகை தந்த கமலுக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. குழந்தை நட்சத்திரமாகவே 6 திரைப்படங்களில் நடித்த கமல், 13 ஆண்டுகளுக்கு பிறகு கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான ’அரங்கேற்றம்’ படத்தில் இளைஞனாக களமிறங்கினார். தனது 25-வது படமான அபூர்வ ராகங்கள் படத்திற்காக முதல் பிலிம்பேர் விருதினை பெற்றார்.

1977ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் ’16 வயதினிலே’ திரைப்படத்தில், இவரின் சப்பாணி கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்று.

1980ல் வெளிவந்த ’வறுமையின் நிறம் சிவப்பு’ திரைப்படத்தின் மூலம் வேலை தேடி சென்னைக்கு ஓடிவரும் இளைஞர்களின் எதார்த்த வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார். ’சலங்கை ஒலி’ திரைப்படத்தில் அனைத்து பாவகங்களையும் லாவகமாக செய்துகாண்பித்து தான்ஒரு சிறந்த பரத கலைஞர் என்பதை நிரூபித்திருப்பார்.

1982-ல் வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சினிமாவை தீவிரமாக காதலிக்கும் கமல்ஹாசன், இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி மீதான அதீத காதல் காரணமாக ஒரு கட்டத்தில் மனநோயாளியாக மாறி நம் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருப்பார். அதுவும் ஸ்ரீதேவி நோயில் இருந்து குணம்பெற்று ரயிலில் பயணிக்க, அவரின் பிரிவை தாங்கிக் கொள்ள இயலாமல் இவர் அந்த நிலைக்கு செல்லும் காட்சிகள் நடிப்பின் உச்சம்.

‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் சாப்ளின் செல்லப்பா கதாபாத்திரம், 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் ’ நாயகன்‘, ‘தேவர்மகன்’ திரைப்படங்களில் முத்திரை பதித்திருப்பார். 

1989ல் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் 3 வேடங்களில் களமிறங்கிய கமல், அப்பு கதாப்பாத்திரத்தில் நடித்தது இன்றவளவும் பேசுபொருளாக உள்ளது.

1996ல் வெளியான ’அவ்வை சண்முதி’ திரைப்படத்தில் சண்முகி வேடத்தில் நடித்து பெண்களை எல்லாம் வெட்கப்பட வைத்திருப்பார். 

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் நடித்திருப்பார். ஆத்திகம், நாத்திகம், இஸ்லாமியர், அமெரிக்க அதிபர் என அனைத்து கதாபாத்திரங்களையும் கனக்கச்சிதமாக கண்முன் கொண்டு வந்திருப்பார். குறிப்பாக பல்ராம் நாயுடு மற்றும் கிருஷ்ணவேணி பாட்டி பாத்திரங்கள் என்றும் நினைவில் நிற்கும். இதன்மூலம் தொழில்நுட்பம், மேக்கப், நடிப்பு, அர்ப்பணிப்பு என பல்வேறு விஷயங்களில் தமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை உணர்த்தி இருப்பார்.

2013ல் அவரின் இயக்கத்தில் வெளியான விஸ்வரூம் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவை விட்டே வெளியேறப் போவதாக அறிவித்தார். இந்தியன் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றன. அதேநேரத்தில், 'மருதநாயகம்' திரைப்படத்திற்காக  இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். ஆனால், இந்த திரைப்படம் இன்றளவும் அவரது கனவு படமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com