மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத்க்கு...அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல்!

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத்க்கு...அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல்!

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக  காலமான நிலையில், அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாதாள பைரவி மூலம் எண்ட்ரீ :

1951 இல் பாதாள பைரவி மூலம் தெலுங்குத் துறையில் அறிமுகமான கே.விஸ்வநாத், பின்னர் 1965-ம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் சிறந்த இயக்குனர் மற்றும், சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார்.  சென்னையில் ஆடியோகிராபராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் சவுண்ட் எஞ்சினியரானார். 

தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை கே.விஸ்வநாத்  இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீவிருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தனித்தனியாக சென்ற அதிமுகவினர்...சொன்னது என்ன?

காலமானார் கே.விஸ்வநாத் :

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு கே.விஸ்வநாத்  காலமானார். படைப்பாற்றல் மற்றும் பன்முக இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டு, சினிமா உலகின் தலைசிறந்தவராக திகழ்ந்த விஸ்வநாத் மறைவு செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரங்கல் தெரிவிப்பு :

காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலமாக இந்திய அளவில் மக்கள் மனதில் இடம்பிடித்த இயக்குநரின் மறைவு வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உடலுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சிவி, பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களும், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு  இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வாயிலாகவும், கமல்ஹாசன் டுவிட்டர் மூலமாகவும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.