‘துணிவு’ படத்துக்காக பலியான மேலும் ஒரு உயிர்...

துணிவு படத்துக்கு அழைத்து செல்லாத காரணத்தால் இளம்சிறுமி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
‘துணிவு’ படத்துக்காக பலியான மேலும் ஒரு உயிர்...

அஜித்குமார் நடிப்பில் கடந்த 11-ம் தேதியன்று வெளியான துணிவு திரைப்படம் 10 நாட்களுக்கு மேலாகியும் ஹவுஸ்புல்லாய் ஓடி களை கட்டி வருகிறது. இதற்கிடையே துணிவு படத்திற்காக ஆங்காங்கே ஓரிரு உயிரிழப்பு சம்பவமும் நடப்பதுதான் கரும்புள்ளியாய் அமைந்துள்ளது. 

கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - சித்ரா தம்பதியர். இவர்களுக்கு 19 வயதிலும், 17 வயதிலும் என இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.

திருப்பனந்தாள் பேரூராட்சி உறுப்பினராக செயலாற்றி வரும் சுரேஷ் ஞாயிற்றுக்கிழமையன்று தனது குடும்பத்தினரை அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்ப்பதற்காக நினைத்துள்ளார். 

துணிவு படத்திற்கு துணிச்சலாக கிளம்பியவர் இளைய மகளை மட்டும் வீட்டிலேயே விட்டு விட்டார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இளையமகள் விரைவில் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு கூறி விட்டார்.

இதையடுத்து மனைவி, மூத்த மகளை அழைத்துக் கொண்டு துணிவு படம் பார்ப்பதற்கு கிளம்பி விட்டார் சுரேஷ். தன்னை விட்டு சென்று விட்டார்களே என விரக்தியடைந்த சிறுமி, தாயின் புடவையை மின்விசிறியில் மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துணிவு படத்தை பார்த்து உற்சாகமாக வீடு திரும்பிய சுரேஷ், சித்ரா ஆகியோர் மகள் உயிரிழந்ததைக் கண்டு கதறி அழுதனர். 18 வயதுக்கு கீழ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாலும், அதுவும் ஒரு கொலைதான் என நடிகர் அஜித்தே மற்றொரு திரைப்படத்தில் பேசியிருந்தார்.

ஆனால் அஜித்தின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சிறுமியே, அஜித்தின் துணிவு படத்தை பார்க்க முடியாமல் துணிவின்றி, துணியிலேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார் என்பதுதான் துக்கமான ஒன்றாகும். 

ஏற்கெனவே துணிவு படத்தின் வெளியீட்டின் போது பரத்குமார் என்ற ரசிகர் கீழே விழுந்து பலியானது, இரண்டாவது தூத்துக்குடி வீரபாகு இவர்களுக்கு அடுத்தபடியாக பள்ளி மாணவியும் பட்டியலில் இணைந்திருக்கிறார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com