ஒரு லட்டு 24 லட்ச ரூபாயா...? என்ன சொல்றீங்க...!

பாலாப்பூர் கணேஷ் லட்டு ஏலத்தில் விற்பனை.....

ஒரு லட்டு 24 லட்ச ரூபாயா...? என்ன சொல்றீங்க...!

ஹைதராபாத் நகரில் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக சுமார் 60 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு  விநாயகர் சதுர்த்திக்கும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்படும்.

அவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை மாநில அரசு, மாபெரும் கிரேன்கள், லாரிகள் ஆகியவற்றை பயன்படுத்தி எடுத்து சென்று நகரில் உள்ள உசேன் சாகர் ஏரியில் கரைக்க வசதிகளை செய்து கொடுக்கும். அதே போல் ஹைதராபாத் நகரில் அமைக்கப்படும் விநாயகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று சமர்ப்பிக்கப்படும் லட்டு ஏலம்விடுவது வழக்கம்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பாலாபூரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு, 1994 ஆம் ஆண்டு முதன்முதலாக ஏலம் விடப்பட்டது. அப்போது அந்த லட்டு ரூ. 450க்கு ஏலம் போனது. அப்போது முதல் தற்போது வரை லட்டு ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டை பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு ஏலம் எடுத்து வருகின்றனர்.

இதனால் ஆண்டுக்கு ஆண்டு லட்டு விலை எதிர்பாராத வகையில் அதிகரித்து, கடந்த 2004 ஆம் ஆண்டு 2,01,000 ரூபாயாக அமைந்தது. அதன் பின்னும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் லட்டு விலை உயர்ந்து 2010 ஆம் ஆண்டு, 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது. ஆனால் அதற்கு பின்னரும் ஆச்சரியப்படும் வகையில் 2011 ஆம் ஆண்டு 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும், 2012 ஆம் ஆண்டு ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும், 2013 ஆம் ஆண்டு 9 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும், 2015 ஆம் ஆண்டு 10 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கும், 2016 ஆம் ஆண்டு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் பாலாப்பூர் கணபதி லட்டை பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.

கடந்த ஆண்டு 21 கிலோ எடை கொண்ட லட்டு 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது. ஆனால் அனைத்தையும் விஞ்சும் வகையில் இந்த ஆண்டு 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பாலப்பூர் கணேஷ் லட்டை ஏலம் எடுத்து தங்கள் ஊரில் தூவுவதால் ஊர் செழிப்படைகிறது என்றும் வயல்களில் தூவுவதால் விளைச்சல் அதிகரிக்கிறது என்றும் அதனை ஏலம் எடுக்கும் நபர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த லட்டை ஏலத்தில் எடுக்கும் நபர்கள் அவற்றை தங்கள் ஊர்களுக்கு கொண்டு சென்று விலை நிலம் உட்பட ஊர் முழுவதும் தூவுவதால் செழிப்படைவதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.