சொத்துக்காக கொலை செய்ய முயன்ற தம்பிகள்... பால்கனி கம்பியை பிடித்துக்கொண்டு தப்பித்த அண்ணன்...
சொத்து தகராறில், உடன் பிறந்த சகோதரரை 3ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சகோதரர்களின் வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள கடோல்கர்குல்லி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரிடம், அவரது இளைய சகோதரர்கள் இருவரும், சொத்துக்காக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், குடிபோதையில் இருந்த சகோதரர்கள், சொத்தில் தனக்கு சம்மந்தம் இல்லையென கையெழுத்து போடுமாறு ஸ்ரீதரை மிரட்டியுள்ளனர்.
இதனால் தன்னுடைய துணிமணிகளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டே செல்வதாக ஸ்ரீதர் கூறியுள்ளார். அப்போது அவர்கள் இருவரும், ஸ்ரீதரை 3ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளனர். பால்கனி கம்பியை பிடித்துக்கொண்டு தத்தளிக்கும் ஸ்ரீதரை, சரமாரியாக தாக்கிய அவரது தம்பிகள், மகனைக் காப்பாற்ற போராடும் அவர்களது பெற்றோரையும் தாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.