சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் அதை 24 மணி நேரத்திற்குள் முடக்க வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் அதை 24 மணி நேரத்திற்குள் முடக்க வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து, சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சமூக வலைதளங்களில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பெயரில் கணக்குகள் வைத்துள்ளனர். அத்தகைய பிரபலங்களின் கணக்குகளில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அவர்களின் பெயரில் போலியான கணக்குகளை துவங்கும் போக்கு பரவலாக காணப்படுகிறது. இது தெரியாமல் குறிப்பிட்ட பிரபலங்களின் சமூக வலைதள கணக்கு என தவறாக நினைத்து, அதை பலர் பின்தொடர்வதும் நடக்கிறது. இதேபோன்று சாமானியர்களின் புகைப்படங்களை திருடி, அவர்கள் பெயரில் போலி கணக்குகள் துவங்கி, அவர்களின் நண்பர்கள் வட்டத்தில் பணம் கேட்டு மோசடி செய்யும் போக்குகளும், சமீபநாட்களாக அதிகரித்து உள்ளன. இதற்கு முடிவுகட்டும் விதமாக, தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி ‘பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பயனாளர்களின் பெயர்களில் துவங்கப்படும் போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.