இடிந்து விழுந்த கட்டிடம்... உயிரிழந்தோர் எண்ணிக்கை?!!

இடிந்து விழுந்த கட்டிடம்... உயிரிழந்தோர் எண்ணிக்கை?!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் 3 மாடி கட்டிடம் ஒன்று திடீரென்று பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

திடீரென்று பலத்த சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பூகம்பம் ஏற்பட்டு விட்டதோ என்று கருதி அச்சமடைந்த நிலையில் கட்டிடம் ஒன்று முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.  அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

அப்போது அந்த வீட்டில் எட்டு பேர் தூங்கி கொண்டிருந்தனர்.  அவர்களின் அஞ்சலி (14) துர்கா பிரசாத் (17) ஆகியோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.  சிவராமகிருஷ்ணா, ராமா ராவ், கல்யாணி, கிருஷ்ணா, ரோஜா ராணி ஆகிய ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

போலீசார், தீயணைப்பு படையினர், ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஆகியோர் விரைந்து வந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்டு படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒருவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க:   கோடை சீசனுக்கு ரெடியாகி வரும் நீலகிரி....!!