ஆவண பட சர்ச்சை: பிபிசிக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்!

ஆவண பட சர்ச்சை: பிபிசிக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்!

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணபட விவகாரத்தில் பிபிசி நிறுவனம் உரிய விளக்கம் அளிக்குமாறு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரம் குறித்து பிபிசி சமீபத்தில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.  இந்த ஆவணப்படம் குஜராத் கலவரத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த மோடிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டும் வகையில் இருந்நதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தை தடை செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த ஆவணப்படம் காலனிய மனோபாவத்தில் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. 

இதனையொட்டி 'ஜஸ்டிஸ் ஆன் ட்ரையல்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அம்மனுவில், "நாட்டின் புகழுக்கும் நீதித்துறையின் மான்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த ஆவணப்படம் அமந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த ஆவணப்படம் இந்திய அரசு மற்றும் மக்கள் மீதான உலக மக்களுக்கு இருக்கும் நல்லெண்ணத்தை தகர்க்கும் விதமாக அமைந்துள்ளது"  எனக் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம் இதுகுறித்து பிபிசி நிறுவனம் உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரிட்டனில் உள்ள பிபிசி நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் மற்றும் இந்தியாவில் உள்ள அதன் கிளை அலுவலகமும் பதிலளிக்குமாறு நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:விஷ சாராய வழக்கு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு!