இதுலயும் போலி வந்துடுச்சா... மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை...

போலி கொரோனா தடுப்பூசிகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுலயும் போலி வந்துடுச்சா... மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை...

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவேக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் வினியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. நம் நாட்டிலும் இவை புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் பேசுகையில், நம் நாட்டில் போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது என்றும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில், தடுப்பூசிகளின் மேல் உள்ள லேபிள் எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கப்பட்டு உள்ளது.