கொரோனா எதிரொலி.. ஷிப்ட் முறையில் செயல்படவுள்ள மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்.!!
கொரோனா பரவல் காரணமாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளும் ஷிப்ட் முறையில் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது வருகிற 31ம் தேதி துவங்க உள்ளது. முதன் நாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து மத்திய பட்ஜெட்டானது பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக, ஏற்கனவே இருந்தது போல, நடப்பாண்டும் இரு அவைகளும் ஷிப்ட் அடிப்படையில் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கூடி ஆலோசித்து முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி மாநிலங்களவை காலை 5 மணி நேரமும், மக்களவை மாலை நேரத்திலும் நடைபெறவுள்ளது.
அதுமட்டுமல்லாது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு மக்களவை கூடும் நிலையில், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு கொரோனா பாதித்திருப்பது மற்றும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் ஆகியன காரணமாக, பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருப்பதாக உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.