அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்!

அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்!

இலங்கையில் அதிபரையும், பிரதமரையும் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்:

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கை மக்கள் அதிபரையும், பிரதமைரையும் பதவி விலக கோரி போராட்டத்தை கையில் எடுத்தனர். அதன்படி ஏற்கனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதன்பின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று 2 மாதங்கள் ஆனபோதும் இலங்கையின் நிதிநிலைமை சீரடையவில்லை. இதைக் கண்டித்தும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தியும் இன்று 9 மணியளவில் கொழும்புவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றே அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலி முகத்திடலில் 1.50 லட்சம் பேருக்கு மேல் திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

போராட்ட காரர்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசும் காவல் துறையினர்:

இந்நிலையில் கொழும்பில் உள்ள களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. ஆர்பாட்ட பேரணியில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுப்புகள் வைத்து தடுக்க முயன்றனர். ஆனால் தடுப்புகளை தகர்த்தெறிந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். இதனால் போராட்ட காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம்:

இதேபோல், அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக்கோரி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் புத்த துறவிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்ட  துறவி வஜிவேவ சிறிசேன மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதால், உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது...

ஆனால் மக்களின் போராட்டம் இன்று தீவிரமடையும் என முன்பே கணிதத்தால், நேற்று இரவே அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை பாதுகாப்பான இடத்திற்கு ராணுவத்தினர் அழைத்தச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.