ஆயுள் காப்பீடு தொகையை 25 ஆண்டுகளில் பெறலாம் - மத்திய நிதி அமைச்சகம்

ஆயுள் காப்பீடு தொகையை 25 ஆண்டுகளில் பெறலாம் - மத்திய நிதி அமைச்சகம்

ஆயுள் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத தொகையை, பாலிசிதாரர் 25 ஆண்டுகள் வரை பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி

காப்பீட்டுத் தொகை பாலிசிதாரர்களால் கோரப்படாத நிலையில், அந்தத் தொகையை வட்டியுடன் மூத்த குடிமக்கள் நலநிதிக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதா?அப்படியெனில் அத்தொகையின் மதிப்பை தெரிவிக்க வேண்டும் என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் பதில்

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவலின்படி உரிமை கோரப்படாத கணக்குகளில் உள்ள தொகையை பாலிசிதாரர்கள் அல்லது அவர்களுக்கு இணையாக உரிமை கோருபவர்களுக்கு சுமுகமான முறையில் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

25 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்

அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாத தொகையை இந்திய காப்பீட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூத்த குடிமக்கள் நல நிதிக்கு வட்டியுடன் மாற்றுவதாகவும், ஆனால் அதன்பின்பு 25 ஆண்டுகளுக்குள் பாலிசிதாரர்கள் தொகை மீது உரிமை கோரும் பட்சத்தில் அவை வழங்கப்படுவதாகவும் கூறினார்.

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தால் மாற்றம்

மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாத கணக்குகளில் உள்ள தொகையாக, 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை ஆயுள் காப்பீட்டின் கீழ் ஆயிரத்து 498 புள்ளி 1 கோடி ரூபாயும், ஆயுள் காப்பீடு அல்லாத பாலிசிதாரர்களின் கோரப்படாத தொகையாக 225 புள்ளி 13 கோடி ரூபாயும் என  மொத்தம் 1723புள்ளி 2 கோடி ரூபாய் மூத்த குடிமக்கள் நல வாரியத்துக்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தால் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.