
ஐக்கிய முற்போக்கு கூட்டணியே தற்போது இல்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிய நிலையில், காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மம்தா பானர்ஜி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார் என்றும், அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மாறி மாறி சென்றவர் என்றும் விமர்சித்தார்.
பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 20-ந் தேதி மம்தா கூறியதை சுட்டிக் காட்டி பேசிய ரந்தீப் சுர்ஜேவாலா, தற்போது கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக போட்டியிடுகிறார் என்றும், இதன்மூலம், தான் எதிர்ப்பதாக நடிக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச சக்திகளுக்கு அவர் மறைமுகமாக உதவுகிறார் என்றும் தெரிவித்தார்.