திருநங்கைகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு திருநங்கை பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் பயன்பெறும் வகையில் அவர்களை ஓபிசி பிரிவில் சேர்க்க சமூக நீதித்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று விரைவில் சட்டமியற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே மத்திய அரசு தங்களை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதை எதிர்ப்பதாக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். திருநங்கைகளுக்கு என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.