அமைதிப் பேரணி - மல்யுத்த வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது...!

அமைதிப் பேரணி - மல்யுத்த வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது...!

புதிய நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த நட்சத்திரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த நட்சத்திரங்கள், கடந்த ஜனவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 4 மாத போராட்டத்தை அடுத்து பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க : ”மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதை தடுப்பதற்கு அரசு இதை விரைவாக செய்ய வேண்டும்” - ராமதாஸ்!

தொடர்ந்து அவர் கைது செய்யப்படாததை கண்டித்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி மல்யுத்த நட்சத்திரங்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட முயன்றனர். விவசாயிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த நிலையில், ஏராளமான பெண் விவசாயிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்நிலையில் பேரணி தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார், வினேஷ் பொகாட், சாக்சி மாலிக் உள்ளிட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

பேரணியில் ஈடுபட்ட பெண் விவசாயிகள் உள்ளிட்டோரை தரதரவென இழுத்துச் சென்று போலீசார் கைது செய்த நிலையில், தரையில் விழுந்து கும்பிட்டு கேட்டுக் கொண்டோரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் டெல்லியிலேயே இருந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.