"ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என பெருமையுடன் கூறலாம்" - பிரதமர் மோடி

ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என பெருமையுடன் சொல்லலாம்  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என பெருமையுடன் கூறலாம்" - பிரதமர் மோடி

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 மாநாடு, இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில், பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். இதற்காக ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்த பிரதமருக்கு, இந்திய வம்சா வழியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து,  முனிச் நகரில்  இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கிராமப்புற இந்தியா, திறந்தவெளி மலம் கழிக்காத நிலையை எட்டியிருப்பதாகவும், அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேசன் கிடைத்திருப்பதாக கூறிய பிரதமர், நமது ஜனநாயகத்தை பற்றி இந்தியர்கள் பெருமிதம் கொள்வதாகவும், ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என பெருமையுடன் கூறலாம் என்றும் தெரிவித்தார்.

நான்காவது தொழில் புரட்சியில் இந்தியா, உலக நாடுகளை வழிநடத்தி செல்வதாக கூறிய பிரதமர்,   வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் கனவுகளை நிறைவேற்ற இந்தியா தற்போது தயாராக உள்ளதென்றும் மோடி குறிப்பிட்டார்.