விறுவிறு குஜராத் தேர்தல்...ஜனநாயகக்கடமை ஆற்றிய பிரதமர்!

விறுவிறு குஜராத் தேர்தல்...ஜனநாயகக்கடமை ஆற்றிய பிரதமர்!

தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பிரதமர் மோடி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

குஜராத் தேர்தல்:

குஜராத்தில் இன்று 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் இன்று வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவு அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை செலுத்துமாறு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தினார். குறிப்பாக முதல் வாக்காளர்களும், பெண்களும் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

இதையும் படிக்க: குஜராத் தேர்தல்... வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குகளை பதிவு செய்த பிறகு அங்கிருந்து வெளியேறி சாலையில் நடந்த அவருக்கு ஏராளமானோர் ஆராவாரத்துடன் ஆதரவளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, குஜராத்தில் ஜனநாயகத் திருவிழா நடந்து வருவதாக தெரிவித்தார். இன்று வாக்களிக்கும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் படேல் தனது வாக்கினை பதிவு செய்தார்.