
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக பதவி வகித்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்த திரெளபதி முர்மு அவர்களிடம் வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்காக நாடு முழுவதும் உள்ள தனது கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. கூட்டணிக் கட்சியினர் புடைசூழ வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
திரெளபதி முர்முவுக்கு ஏற்கனவே ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியும் திரெளபதிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதால் அவர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.