பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏற்படுத்திய ஆறாத ரணம்... மும்பை தாக்குதல் சம்வத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்...
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள், தனித்தனி குழுவாக சென்று, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.
இதனையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவனை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியான நிலையில், 300 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி, தாக்குதல் நடந்த இடம் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகளை கடும் சோதனைக்குட்படுத்திய பின்னரே அனுமதித்தனர்.