வன்னியர் இடஒதுக்கீடு ரத்து உத்தரவு தொடரும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த அவசர மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. 

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து உத்தரவு தொடரும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

வன்னியர் சமூகத்திற்கு 10 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை அதிமுக கொண்டு வந்தது.  இந்த உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த  நீதிமன்றம், வன்னியருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அறிவித்தது. இந்தநிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்த அவசர வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உள்ஒதுக்கீடு திடீரென ரத்து செய்யப்பட்டதால், பொறியியல், மருத்துவம், வேளாண் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்தமுடியவில்லை என கூறப்பட்டது.  எனவே இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறினார். அதேவேளையில் இந்த வழக்கில் பலர் மனு தாக்கல் செய்துள்ளதால் அதனை தொகுத்து அவர்கள் சார்பில் ஒரு வழக்கறிஞரும், எதிர் தரப்பிலிருந்திருந்து ஒரு வழக்கறிஞரும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். 

மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனம் நடைபெறக்கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், ஏற்கனவே நடைபெற்ற பணிநியமனம், மாணவர் சேர்க்கையை தொந்தரவு செய்யகூடாது என கூறி வழக்கு விசாரணை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். விசாரணையின்போது வழக்கின் வாதங்களை அனைத்து தரப்பினரும் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.