"பெண் சக்தியை குஜராத்தில் இருந்து மேம்படுத்துவோம்" - பிரதமர்

பெண்களின் சக்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை குஜராத்தில் இருந்து தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி மகளிர் மத்தியில் உரையாற்றினார். 

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பாஜகவின் பேரணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக டெல்லியில் இருந்து குஜராத் வந்த மோடிக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து நாரி சக்தி வந்தன் எனப்படும் மகளிர் சக்திக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், பெண்கள் உற்சாகமாக வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றி இருப்பதன் வெளிப்பாடாகவே இந்த மகிழ்ச்சியைப் பார்ப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, அது நியாயமான மகிழ்ச்சிதான் என்றும், மோடி என்ற சகோதரர் பெண்களுக்கு ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு வழங்கும் அன்புப் பரிசு இது என்றும் குறிப்பிட்டுப் பேசினார். 

பெண்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இருந்தே பெண்கள் நிலை தாழ்த்தப்பட்டு வந்ததாக பேசிய பிரதமர் மோடி, அதை ஒழித்து, பெண்களின் சக்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை குஜராத்தில் இருந்து தொடங்கி இருப்பதாகவும் பேசினார்.