கர்நாடக முதலமைச்சா் யாா்? டெல்லி விரையும் தலைவர்கள்!

கர்நாடக முதலமைச்சா் யாா்? டெல்லி விரையும் தலைவர்கள்!

கர்நாடக முதலமைச்சா் யாா்? என்பதை அனைத்திந்திய காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு செய்யும் என பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பின்னர் 130க்கும் மேற்பட்ட இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

இதில், கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட மஜத வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காங்கிரஸ் கட்சியின் கர்நாடக கமிட்டி தலைவா் டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்று உள்ளார். இதேபோன்று, வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் வி.சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளார். 

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சா் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதலமைச்சா் வேட்பாளர் என்று எவரையும் அறிவிக்காத நிலையில் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சா் பதவிக்கான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 136 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சா் யாா்? என்பதை அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு செய்யும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே வருகிற 18-ம் தேதி முதலமைச்சா் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் விழாவில் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சா் பதவியை எதிர்பார்த்து இருக்கும் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இன்று டெல்லிக்கு விரைகின்றனர்.  

இதையும் படிக்க:100 அடி பனையில் மது அருந்திய போதை பிரியர் - நீண்ட போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்பு