ஆந்திரா | காக்கிநாடா சமீபத்தில் கிருஷ்ணலங்கா, யானம் இடையே கோதாவரிதியில் போக்குவரத்து பாலம் உள்ளது. நேற்று மாலை அந்த பாலத்தின் மீது இருந்து இளம் பெண் ஒருவர் கோதாவரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் வீரபாபு இளம் பெண் ஒருவர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீரபாபு உடனடியாக செயலில் இறங்கி கோதாவரி நதியில் குதித்து அந்த பெண்ணை மீட்டார்.
இதனை பார்த்த வேறொரு நபரும் கோதாவரியில் குதித்து வீரபாபுவிற்க்கு உதவி செய்தார். அங்கிருந்த படகோட்டிகள் தங்களுடைய படகை அவர்களிடம் கொண்டு சேர்த்து அந்த இளம் பெண்ணை மீட்க உதவி செய்தனர்.
தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் அந்த பெண்ணை யானம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். ஆயுதப்படை காவலர் வீரபாபு செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.