
2 டோஸ் போடாததால் 100 ஊசி போட வேண்டியதாயிற்று, முகக்கவசம், தடுப்பூசி போடாததால் கொரோனாவில் பாதிக்கப்பட்டேன் என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி குருசுக்குப்பம் ஜிப்மர் நகர்ப்புற சுகாதார மையத்துக்கு மூன்று மாடியில் புதிய கட்டிடம் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நான் முகக்கவசமும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. சாதாரணமாக இருந்ததால் முதல்வராக பொறுப்பேற்கும் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன் என்றார். மேலும் நான் தடுப்பூசி போடாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன் என்ற அவர், தடுப்பூசி போட்டு, முகக்கவசம் அணிந்திருந்தால் தொற்று வந்திருக்காது எனவும், இவை இரண்டையும் செய்யாததால் தான் பாதிக்கப்பட்டேன் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் மருத்துவமனையில் எனக்கு 100 ஊசி போட்டார்கள் என்றும் அந்த 2 டோஸை போட்டிருந்தால் எனக்கு பிரச்னை இருந்திருக்காது. என்றும் கூறினார்.