செல்போனை திருடியதாக சிறுமி மீது வீண் பழி: நஷ்ட ஈடு வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு...

செல்போனை திருடியதாக சிறுமி மீது வீண் பழி போட்ட கேரளா காவல்துறையின் மன்னிப்பை நீதிமன்றம் நிராகரித்து நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

செல்போனை திருடியதாக சிறுமி மீது வீண் பழி: நஷ்ட ஈடு வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு...

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய விண்கலனுடன் ஒரு லாரி சென்றது. ஆற்றிங்கல் தோன்னக்கல் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் அதை காண்பதற்காக தனது 8 வயது மகளுடன் சென்றுள்ளார்.

அப்போது, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ரஜிதாவின் செல்போன் காணாமல்  போயியுள்ளது.  அதை ஜெயசந்திரனின் மகள் திருடியிருப்பதாக நினைத்து போலீசார் அவரிடம் விசாரித்துள்ளார். தான் திருடவில்லை என்று சிறுமி கூறி அழுதபோதும் ஜெயசந்திரனையும் பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் அவமானப்படுத்தி திட்டினர். 

இந்நிலையில், பெண் போலீசின் செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடும்படி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் பெண் போலீஸ் ரஜிதா, சிறுமியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, சிறுமிக்கு நஷ்டஈடு கொடுக்க தேவையில்லை,' என கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, சிறுமிக்கு நஷ்டஈடாக ரூ.1.5 லட்சமும், நீதிமன்ற செலவாக ரூ.25 ஆயிரமும் கொடுக்கும்படி உத்தரவிட்டனர்.