டிசம்பர் தேர்தலையொட்டி, மத்தியபிரதேசம், ராஜஸ்தானுக்கு பிரதமா் சுற்றுப்பயணம்...!

Published on

மத்திய பிரதேசம், ராஜஸ்தானுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அங்கு நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

ராஜஸ்தான் ஜோத்பூரில், சாலை, ரெயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறாா். இந்த திட்டங்களில் ஐஐடி ஜோத்பூர் வளாகமும் அடங்கும்.

அதேநேரத்தில் நகர விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் சாலை, ரயில், எரிவாயு குழாய், வீட்டு வசதி மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற துறைகளில் 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மாண்ட்லா, ஜபல்பூர், திண்டோரி, சியோனி ஆகிய மாவட்டங்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளாா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com