நேஷனல் ஹெரால்டு வழக்கு; காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி !

நேஷனல் ஹெரால்டு வழக்கில்  காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு; காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி !

காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி வரும் 8 ஆம் தேதி ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, 1942 இல் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடங்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் அதை அடக்க முயன்றதாகவும், தற்போது மோடி அரசும் அதையே செய்வதாகவும் இதற்காக மத்திய அமலாக்கத்துறையை பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் காங்கிரஸ் குற்றச்சாட்டிற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.  ஒரு குற்றவாளி தனது குற்றத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் அப்படி தன்னை குற்றவாளி என ஏற்றுக்கொள்வதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்றும் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.